தமிழ்நாடு
ஜூலை 5 முதல் கூடுதல் தளர்வுகளா? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஆரம்பத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும், அதன்பின் படிப்படியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதி உடன் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவடைவதை அடுத்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார் இந்த ஆலோசனையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது நான்கு மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து மேலும் 23 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படும் என தெரிகிறது.
மேலும் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் இடம்பெறும் என்றும் அனேகமாக திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுக்கு திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது
நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் அதன்பின் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் கூடுதல் தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















