இந்தியா
தென்மேற்கு பருவமழை: நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இந்த சூழ்நிலையில் தென்மேற்கு பருவமழையும் காலம் தாழ்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை 6 நாட்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்த தென்மேற்கு பருவமழை காரணமாக வரும் 10, 11-ஆம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.






















