இந்தியா
மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்குத் தடை: கெத்து காட்டும் மம்தா பானர்ஜி!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக நடத்த உள்ள வெற்றிப் பேரணிக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்து அதிரடி காட்டியுள்ளார்.
சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக ஏற்கனவே ஹூக்ளி, பங்குரா, புருலியா, மிட்னாபூர் மாவட்டங்களில் வெற்றிப் பேரணி நடத்தி பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் எந்த வெற்றிப் பேரணியும் நடத்த இடமில்லை என்றார்.
மேலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகும் நிலையில் வெற்றிப் பேரணிகள் நடத்த இனி அனுமதியில்லை. வன்முறை, கலவரங்களைத் தூண்டும் விதத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக வெற்றி பெற்ற பிறகு வன்முறைகளுக்கு முடிவே இல்லை, அமைதி நிறைந்த இடமான மேற்கு வங்கம் ஒருபோதும் வன்முறைகளை பொறுத்துக் கொள்ளாது என்றார் மம்தா பானர்ஜி.












