தமிழ்நாடு
“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சென்னை: NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாடு (NDTV Tamil Nadu Summit 2026) நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எழுந்த கேள்விக்கு, தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா தெளிவான பதிலை வழங்கினார்.
“தமிழ்நாடு அரசு, இளைஞர்களை இரண்டு நிமிட இன்ஸ்டாகிராம் கிளிப்புகளாக மாற்ற விரும்பவில்லை. அவர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளையும், திறன் வளர்ச்சியையும் வழங்குவதே எங்களின் இலக்கு” என்று அவர் கூறினார்.
திரைப்பட நட்சத்திரங்களும், ரசிகர் கூட்டங்களும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு அறியப்படும் நிலையில், ஆட்சியும் ஆடம்பரமும் வேறுபட்டவை என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி பொழுதுபோக்கு அரசியலை விட, கல்வி, திறன், தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தர மேம்பாட்டையே முன்னிலைப்படுத்துகிறது என்றார்.
இளைஞர்களின் எதிர்காலம் வெறும் புகழ் தேடலுக்காக வீணாகாமல், உண்மையான தொழில் வாய்ப்புகள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். தொழிற்துறை முதலீடுகள், புதிய நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் சூழல் மற்றும் திறன் பயிற்சி திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“கவனம் சிதறடிக்கும் அரசியலை விட, வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஆட்சி தான் தமிழ்நாட்டின் அடையாளம்” என்ற அவரது கருத்து, மாநாட்டில் கலந்து கொண்டோரிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த உரையின் மூலம், இளைஞர்களின் கனவுகளுக்கு அடித்தளம் அமைப்பதே திமுக அரசின் நோக்கம் என்பதை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீண்டும் வலியுறுத்தினார்.


















