இந்தியா
வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி தகுதிநீக்கம்: மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.
மக்களவை செயலாளர் உத்பால் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அவதூறு வழக்கில் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவர் மார்ச் 23 முதல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராகுல் காந்தி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.