இந்தியா
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை: உபி அரசு அதிரடி
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் சில கட்டுப்பாடுகளை விதித்து மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் நான்கு பேருக்கான ரேஷன் அட்டைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச கல்வி மருத்துவம் போன்ற ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது ஜூன் 19-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா விரைவில் உபி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒருபக்கம் வரவேற்பும், இன்னொரு பக்கம் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.