இந்தியா
உத்தரகாண்ட் தேர்தலில் களமிறங்கும் கெஜ்ரிவால்- அதிரடி வாக்குறுதிகள் அறிவிப்பு!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தலில் களம் காண உள்ளது. இந்நிலையில் தேர்திலில் தாங்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என்பது குறித்து கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
உத்தரகாண்ட் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சியும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் மின் வெட்டுப் பிரச்சனை இருந்து வருகிறது. இது முற்றிலும் ஒழிக்கப்படும். வீட்டுக்கு 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்சாரக் கட்டணம் பாக்கி இருந்தால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு மின்சாரம் என்பது மிகவும் அவசியாமனதாக இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கு இலவசமாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். உத்தரகாண்டை காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்து பெரிதாக எதையும் செய்யவில்லை.
நான் தேர்தலுக்காக வாக்குறுதிகளை கொடுக்கவில்லை. அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டுவோம். டெல்லியில் செய்து காட்டியுள்ளோம். அதை உத்தரகாண்டிலும் எங்களால் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.























