தமிழ்நாடு
அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. எந்த துறை? எப்போது?
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 2022, டிசம்பர் 14-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
அவர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் விரைவில் அமைச்சர் ஆவார் எனக் கூறப்பட்டு வந்தது. அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளின் போதும் கூட திமுகவினர் பலர் அவர் விரைவில் அமைச்சராக வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் 2022, டிசம்பர் 14-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கத் தமிழ்நாடு ஆளுநர் ரவியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அல்லது சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இப்போது காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிவ.வீ.மெய்ய நாதன் இருக்கிறார். சிறப்புத் திட்டச் செயலாக்கம் துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்கும் போது 200 நபர்களுக்கு மட்டும் அந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.