தமிழ்நாடு
தமிழக முதல்வரின் பாதுகாப்பு குழுவில் 9 சிங்கப்பெண்கள்.. தேர்வு பெற்றது எப்படி?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு குழுவில் 9 பெண்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த முதல்வருக்கும் இவ்வளவு அதிகமான பெண்கள் பாதுகாப்பு குழுவில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 9 பெண்களுக்கும் துணை இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள், சபாரி உடைகள் தரப்பட்டுள்ளன. முதல்வரின் பாதுகாப்பு குழுவில் உள்ள 9 பேரும் பெண்கள் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குழுவில் சப்-இன்ஸ்பெக்டர் எம் தனுஷ் கண்ணகி, தலைமைக் காவலர் எம் தில்ஷாத் பேகம், காவலர்கள் ஆர் வித்யா, ஜே சுமதி, எம் காளீஸ்வரி, கே பவித்ரா, ஜி ராமி, வி மோனிஷா மற்றும் கே கௌசல்யா ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வரின் பாதுகாப்பு குழுவிற்கு 80க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் அவர்களில் இந்த 9 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கடுமையான உடல் மற்றும் மனப் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய பாதுகாப்பு குழுவில் உள்ள பெண் ஒருவர் கூறியபோது, ‘நாங்கள் மிகவும் கண்காணிப்புடன் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கிறோமா என்பதற்காக பரிசோதனை செய்யப்பட்டோம் என்றும் எடுத்துக்காட்டாக ஒரு நிமிடத்திற்குள் எதிர்வரும் கார் மற்றும் அதில் உள்ளவர்களின் எண்ணிக்கை நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் நாங்கள் அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருக்கும் இந்த சிங்கப்பெண்கள் பணிக்கு வருவதற்கு முன் காலை 6 மணி முதல் பயிற்சி பெறுவதாகவும் ஒரு நிமிடத்திற்கு சுமார் 30 புஷ் அப் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு நிராயுதபாணியான போர், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு கண்டறிதல், மோட்டார் சைக்கிளை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வர் அவர்களின் ஒவ்வொரு நாளின் தினசரி அட்டவணைகளை தயாரிப்பது இந்த பாதுகாப்பு குழுவினர் தான் என்றும் இந்த விவரங்கள் முதல்வரின் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.