தமிழ்நாடு
இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் செய்தார்களா? ஆக்சிஜன் விவகாரம் குறித்து உதயநிதி!

தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்வளவு நாட்களும் உங்களை ஆலோசித்து தான் மத்திய அரசு செய்ததா என கிண்டலுடன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து 45000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?
மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.
அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு.





















