செய்திகள்
தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?
Published
17 minutes agoon
By
Poovizhi
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய், சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் காபந்து முதலமைச்சராக தொடர்வார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்த அரசியல் மாற்ற சூழலில், பொதுமக்கள் மத்தியில் முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால் – முந்தைய திமுக அரசு அறிமுகப்படுத்திய “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பதே. குறிப்பாக, குடும்பத் தலைவிகள் இந்த மாத உதவித்தொகை வழக்கம்போல் வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் கூடுதலாக கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 வழங்கப்பட்டதால், மொத்தம் ரூ.5,000 கடந்த மாதம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
இதன், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில், 60 வயதிற்குள் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது இந்த புதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், புதிய அரசு பதவியேற்ற உடனேயே பெரிய அளவிலான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாக இல்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முக்கிய அறிவிப்புகள் தாமதமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், புதிய திட்டத்திற்கான தகுதி விதிமுறைகள், விண்ணப்ப செயல்முறை போன்றவற்றை வடிவமைக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இதனால், இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது ரூ.2,500 திட்டத்தை விரைவாக செயல்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்நிலையில், புதிய திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் வரை, தற்போதைய உரிமைத் தொகை திட்டம் தொடருமா என்பது பொதுமக்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. பழைய திட்டத்தில் இருந்த பொருளாதார கட்டுப்பாடுகளை விட, “அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும்” என்ற புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வரும் காலத்தை பொறுத்திருந்தே அதன் தாக்கத்தை மதிப்பிட முடியும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















