தமிழ்நாடு
அமைச்சர் ஆனதும் முதல் அறிக்கை: வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பல திமுகவினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர் ஆனவுடன் அவர் தனது முதல் கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தும் கோப்பில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனது தாத்தாக்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இல்லாதது தனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த கலைஞர், பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறு உருவாக வாழும் நம் தலைவர், முதலமைச்சருக்கு, கழக முன்னோடிகள் – கழக உடன்பிறப்புகள் – என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்கள் இளைஞர் அணியினர் – தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.