இந்தியா
திடீரென விலகிய டுவிட்டர் குறை தீர்க்கும் அதிகாரி: பதவியேற்ற ஒருசில நாட்களில் விலகியதால் பரபரப்பு!

மத்திய அரசு சமீபத்தில் புதிய சமூக வலைதளங்களுக்கான விதிகளை அமல்படுத்திய நிலையில் இந்த விதிகளுக்கு முதலில் அனைத்து சமூக வலைதளங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்காத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என கூறியதை அடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் இந்தியாவின் புதிய சமூக வலைதள கொள்கையை ஏற்றுக் கொண்டன என்பது குறிப்பிடப்பட்டது.
ஆனால் டுவிட்டர் மற்றும் தொடர்ந்து இந்தியாவின் சமூக வலைதள கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து ட்விட்டர் நிர்வாகம் இடைக்கால குறைதீர்க்கும் அதிகாரி ஒருவரை நியமனம் செய்தது. இந்தியாவில் டுவிட்டர் பயனாளிகளின் இடைக்கால குறைதீர்க்கும் அதிகாரியாக சமீபத்தில் தர்மேந்திரா சத்தூர் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக பதவி ஏற்ற தர்மேந்திரா திடீரென இன்று ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த தர்மேந்திராவின் பெயர் டுவிட்டர் தளத்தில் காணப்படவில்லை என்பதால் அவர் பதவியில் இருந்து விலகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டுவிட்டரில் நிர்வாகம் வேறு அதிகாரியை அந்த பதவிக்கு நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் புதிய அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை தற்போது இந்தியாவில் உள்ள சுமார் 50 லட்சம் டுவிட்டர் பயனாளிகளிடம் இருந்து வரும் புகார்களை பெறுவதற்கு அதிகாரி இல்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய அரசு டுவிட்டர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.














