தமிழ்நாடு
திடீரென்று ரெட் அலர்ட்; ஆனால் ஒரு சொட்டு மழைகூட இல்லை: அரசியல் செய்கிறதா வானிலை ஆய்வு மையம்!
மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியதையடுத்து இடைத் தேர்தலுக்கான தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என குற்றம் சாட்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் சென்று செயல்வீரர்கள் கூட்டம், சைக்கிள் பேரணி நடத்திய ஓபிஎஸ், ஈபிஎஸ், மழைக்காலம் காரணமாக இடைத் தேர்தலை தள்ளிவைக்கச் சொல்லி தலைமைச் செயலாளரை விட்டு ஒருபக்கம் கடிதம் எழுதச் சொல்லியுள்ளனர்.
இதே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நவம்பர் மாதக் கடைசியில்தான் நடந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடந்த சமயத்தில் கன்னியாகுமரியை ஓகி புயல் தாக்கியது. இதுவரை தேர்தல் ஆணையத்தை தன்னிச்சையான அமைப்பு என்று நினைத்திருந்தோம். தேர்தல் அறிவிக்காததற்கு ஆணையம் சொல்லும் காரணத்தைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.
திடீரென்று ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால் நேற்று சென்னையில் ஒரு சொட்டு மழைகூட இல்லை. ஆக வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது அதிபர் ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.