செய்திகள்
திமுக பிரமுகரை தாக்கிய விவகாரம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…

தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தார். அவரும், அதிமுகவினரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், அவரின் சட்டையை கழட்டி கையை பின்புறம் கட்டி அவரை அழைத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதைப்பார்த்த பலரும் அந்த நபர் தவறே செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் பலரும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அதிமுகவினர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்த போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ‘திமு கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி ஜெயக்குமார் அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்’ என ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்தே ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















