தமிழ்நாடு
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை ஒன்றை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இந்தநிலையில் இந்த அரசாணையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உள் ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாயத்திற்கு மட்டும் அல்ல என்றும் ஏழு பிரிவினருக்கு உள்ளானது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி உள் ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும் அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும் மதுரை உயர்நீதிமன்றம் இந்த அரசாணையை தடை செய்தது என்பதும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது தவறானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் ஒரு சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















