ஆரோக்கியம்
பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

நமது இந்திய மண்ணில் புற்று நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய் போன்றவை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசைளில் இப்போது நாளமில்லா சுரப்பி எனப்படும் தைராய்டு (கழுத்துக் கழலை) புற்றுநோய் என்ற ஒன்றும் சேர்ந்து கொண்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு 3 மடங்கு அதிகம் வர வாய்ப்புள்ளதாக கூறுகிறது மருத்துவ உலகம். அதேபோல் தைராய்டு பிரச்னையும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதால் அது எப்படி புற்றுநோயாக மாறுகிறது? அதை அறிந்து கொண்டு சிகிச்சை பெறுவது எப்படி என்பது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
மற்ற புற்றுநோய்களைப் போல் அல்லாமல் தைராய்டு புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் அதிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தை உருவானதும் தைராய்டு சுரப்பி குழந்தையின் நாக்கின் அடிப்பாகத்தில் சிறிய புள்ளி மாதிரி ஆரம்பித்து இறங்கி கழுத்தில் வந்து நின்று அங்கு வளர ஆரம்பிக்கும். இது இயல்பு.
ஆனால் சில குழந்தைகளுக்கு நாக்கின் அடிப்பாகத்திலேயே அது நின்றுவிடும். சில குழந்தைகளுக்கு பாதி தூரம் வந்து நின்று விடும். இன்னும் சில குழந்தைகளுக்கு இந்த சுரப்பி இருக்கும். ஆனால் வேலை செய்யாது.
தைராய்டு சுரப்பி சரிவர வேலை செய்யவில்லை என்றால் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் குழந்தைகள் பிறந்ததுமே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். கேரளா, கோவாவில் இதனை கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். இப்போது கர்நாடகாவிலும் செய்கிறார்கள்.
இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும்போதே தைராய்டு பிரச்னை இருக்கிறது. எனவே பிறக்கும்போதே குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து ரத்தத்தை எடுத்து பரிசோதித்து கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் குழந்தைகள் இயல்பாகி விடுவார்கள்.
சில குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதில் கூட இந்த தைராய்டு பிரச்னை வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில சமயங்களில் நமது உடலே நம்மை எதிர்த்து போராடும் ஆட்டோ இம்யூன் டிசீஸ் இருக்கும் போது இந்த தைராய்டு சுரப்பி வேலை செய்யாது. தைராய்டு ஹார்மோன் உடல் உறுப்புக்களுக்கும் செல்களுக்கும் பேட்டரி மாதிரி செயல்படும். இது சுரக்காதபோது உறுப்புகளும் செல்களும் பாதிக்கப்படும்.
தைராய்டு ஹார்மோன் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணிக்கும் பணியை பிட்யூட்டாி ஆர்மோன்தான் செய்கிறது. தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனைத் தூண்டும் பணியையும் அதிகமாக வேலை செய்தால் கட்டுப்படுத்தும் பணியையும் இந்த பிட்யூட்டரி ஆர்மோன்தான் செய்கிறது.
தைராய்டு பரிசோதனையில் பரிசோதிக்கப்படும் “டிஎஸ்எச்“ என்பது பிட்யூட்டரி ஹார்மோன்தான்.
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பிட்யூட்டரி ஹார்மோன் அதைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இதனால் தைராய்டு சுரப்பி வேலை செய்ய முயற்சி செய்து வீங்க தொடங்கும். அப்போது மருந்துகள் எடுத்துக் கொண்டால் வீக்கம் சரியாகிவிடும். மருந்துகள் எடுக்காவிட்டால் வீக்கம் அதிகமாகி கட்டியாகிவிடும்.
சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் கட்டி ஏற்படும். சிலருக்கு ஒரு இடத்தில் மட்டும் சிலருக்கு பரவலாகவும் கட்டிகள் ஏற்படும். இவை எல்லாமே புற்றுநோய் கட்டிகள் கிடையாது. இவற்றை ஸ்கேன் செய்து அதிலிருந்து நீர் எடுத்து பரிசோதித்து கண்டுபிடிப்பார்கள். தைராய்டு சுரப்பி வேலை செய்வதை நிறுத்தி விட்டால் வாழ்நாள் முழுதும் மாத்திரை எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.
குழந்தைகளைப் பொறுத்தவரை தைராய்டு ஹார்மோன் குறைந்தாலோ சுரக்காவிட்டாலோ அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு அவர்களின் இயக்கமே மெதுவாகிவிடும். இதயத்துடிப்பும் மெதுவாகிவிடும். மலச்சிக்கல் எற்படும். பிட்யூட்டரி சுரப்பியில் வீக்கம் ஏற்படும். உடலில் இருக்கும் நீர் வெளியேறாது. கால் வீக்கமாகும். மாதவிலக்கு சரியாக வராது. ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். கருவுறுவதில் பிரச்னை ஏற்படும்.
தைராய்டு நோயில் ஹார்மோன் குறைவாக சுரக்கும் ஹ்ய்ப்போ தைராய்டு அதிகமாக சுரக்கும் ஹ்ய்ப்பர் தைராய்டு என இரண்டு வகை உள்ளது. இரண்டுமே பிரச்னைதான்.
கழுத்துக்கு முன்னால் பட்ாம்புச்சி மாதிரியான தோற்றத்தில்தான் தைராய்டு சுரப்பி இருக்கும். அந்த வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால் கழுத்துப் பகுதியில் மேடும் பள்ளமுமாக இருந்தால் பேசும்போது குரல் சரியாக வரவில்லை என்றால் சாப்பிடும்போது விழுங்குவது கஷ்டமாக இருந்தால் பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.









