பர்சனல் ஃபினான்ஸ்
வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி தேதி? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

2019-2020 நிதி ஆண்டுக்கான வருமான வரியை தக்கல் செய்ய ஜனவரி 10-ம் தேதிதான் கடைசி தேதி. பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி தேதியாக இருக்கும். ஆனால் கோவிட்-19 பெறுந்தொற்று காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை ஜனவரி 10-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும். சென்ற ஆண்டு எல்லாம் இது 5,000 ரூபாயாக இருந்தது. ஆறு மாதங்களுக்கும் அதிகமாக வருமான வரி தக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் இந்த அபராதம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதற்கு முன்பு எல்லாம், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிவடையும். அதற்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அதிகபட்சம் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
இந்த முறை வருமான வரி தாமதமாகத் தாக்கல் செய்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் எல்லாம் ஏற்படும்?
1) வருமான வரி தக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகு செய்தால், ரீஃபண்ட் பணம் வர தாமதம் ஆகும்.
2) தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமான வரி சட்டப் பிரிவு 234F கீழ் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் என்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
3) அதற்கு மேல் வருமான வரி தாக்கல் செய்ய ஏற்படும் ஒவ்வொரு மாதம் கால தாமத்திற்கும், வருமான வரி சட்டப்பிரிவு 234A கீழ் கூடுதலாக 1 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.
4) வருமான வரி செலுத்த வேண்டும் என்று தெரிந்தும் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு, வருமான வரி சட்டப்பிரிவு 142 மற்றும் 148 கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் வருமான வரி சட்டப்பிரிவு 276CC கீழ் நீதிமன்றம் சென்று பதில் கூற வேண்டிய நிலையும் ஏற்படும்.
நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
60 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. இன்றைய சூழலில் வருமான வரி தாக்கல் செய்த ஆவணம் வீட்டுக் கடன் போன்ற கடன்களை வாங்கும் போது முக்கிய ஆவணமாக உள்ளது. 60 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் 3 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு அதிகமாக உள்ளவர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்தால் எந்த வரியும் செலுத்த வேண்டி இருக்காது. மாத சம்பளம், வங்கி வட்டி வருவாய் பொன்றவற்றுக்காக வரி பிடிக்கப்பட்டு இருந்தால் அவை திரும்ப அளிக்கப்படும். எனவே ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.











