தமிழ்நாடு
அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வன்? காலியாகும் தினகரன் கூடாரம்!

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஏமாற்றத்தை அளித்தது. போட்டியிட்ட அத்தனை பேரும் தோல்வியை தழுவியது. எதிர்பார்த்த வாக்கு சதவீதத்தை கூட அவர்களால் அடையமுடியவில்லை.
இதனால் அமமுகவில் இருந்து வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது அமமுக முக்கிய தலைவராக உள்ள மாநில கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தங்க தமிழ்ச்செல்வன் அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டவர். உறுதியாக அந்த தொகுதியில் வெற்றிபெறுவார் என கூறப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்தையே பெற்றார். இவர் தற்போது அதிமுகவில் இணைய உள்ளதாக பேசப்படுகிறது. அதிமுக தரப்பு தங்க தமிழ்செல்வனிடன் பேசி வருவதாக முன்னர் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை. தேனி தொகுதி தேர்தலை பொறுத்தவரை மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது.
அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப புடிக்கும் என கூறினார் தங்க தமிழ்ச்செல்வன். வழக்கமாக எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் அந்த பேட்டியில் பாராட்டி பேசியிருப்பது விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். இதனால் மேலும் சிலரும் அமமுகவில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. தினகரன் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது.


















