சினிமா செய்திகள்
பாடகர் கேகே மரணத்திற்கு காரணம் அதிக உற்சாகமா? பிரேத பரிசோதனையில் தகவல்
பாடகர் கேகே அதிக உற்சாகத்தில் இருந்ததால் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாடகர் கேகே சமீபத்தில் கொல்கத்தாவுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேகே மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேகேவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கேகேவின் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்தது என்றும் அவர் அதிக உற்சாகத்தில் இருந்ததால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்றும் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.