இந்தியா
அதானிக்கு கொடுத்த கடன் எவ்வளவு? அனைத்து வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்த ரிசர்வ் வங்கி..!
அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம் 24 ஆம் தேதி அதானி குழுமம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கையில் அதானி நிறுவனங்களின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து அதானி குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரமாரியாக சரிந்தது.
இதனால் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பதும் அவரது குழுமங்களில் உள்ள நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது.
அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதமும் சரிந்தன. இதனால் அதானி குழுமங்களின் மதிப்பு ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் எப்.பி.ஓ மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த எப்.பி.ஓ ரத்து செய்யப்பட்டதாகவும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதானி குழுமத்திற்கு கடந்த ஐந்து நாட்களில் மற்றும் 7.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் எல்.ஐ.சி உள்பட அதானி நிறுவனத்திடம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், அதானி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆகியவை பெரும் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட பாதிப்பு, அதானி குழுமங்களுக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.