இந்தியா
முன்பதிவு செய்த சீட்டே இல்லை. ரயில் பயணியின் அதிர்ச்சி அனுபவம்
ரயில் பயணி ஒருவர் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு ரயிலில் ஏறிய போது தனக்கான சீட்டை அங்கு இல்லை என்பதை அறிந்து அவர் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தார்.
சொகுசான ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணம் செய்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் நமக்கான கோச் மற்றும் சீட் நம்பர் கொடுக்கப்படும் என்பதும் அதில் நாம் அமர்ந்து பயணம் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோ மற்றும் வாரணாசி இடையே சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பயணி ஒருவர் அந்த ரயிலில் தான் முன்பதிவு செய்த சீட்டே இல்லை என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
அவருக்கு சி கோச்சில் 74 மற்றும் 75 ஆகிய இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கோச்சில் மொத்தம் 73 இருக்கைகள் மட்டுமே இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் டிக்கெட் பரிசோதகரிடம் இது குறித்து கூறிய போது முன்பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகள் காரணமாக இந்த தவறு நடந்ததாக கூறி அவரை சமாதானப்படுத்தி அவருக்கு வேறு இருக்கைகளை ஒதுக்கியுள்ளார்.
மேலும் இந்த குறையை தீர்க்க ரயில்வே அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் அந்த பயணிக்கு ஆறுதல் கூறியுள்ளார். 75 இருக்கைகள் கம்ப்யூட்டரில் காண்பிப்பதால் தான் இந்த தவறு நடந்தது என்றும் இதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிக்கெட் பரிசோதகர் கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்ப பிரச்சனை குறித்து ஸ்டேஷன் மாஸ்டர் கூறியபோது இந்த பிரச்சனை 15 நாட்களுக்கு முன்னர் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் ரயில்வேயின் பெரும்பாலான முக்கிய தகவல் அமைப்புகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திற்கு இந்த தகவலை அனுப்பி உள்ளதாகவும் விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் கூறினார்.