இந்தியா
வேறு மாநிலத்திற்கு வீடு ஷிப்ட் செய்ய போகிறீர்களா? உங்களுக்கு உதவுகிறது இந்தியன் ரயில்வே..!
வீடு காலி செய்து பொருள்களை வேறு வீட்டுக்கு எடுத்து செல்வது என்பது மிகப்பெரிய சவாலான ஒரு வேலையாக இருக்கும் நிலையில் அந்த வேலையை இந்தியன் ரயில்வே எளிதாக்குகிறது. குறிப்பாக வெகு தூரத்திற்கு அதாவது வேறு மாநிலத்திற்கு வீடு காலி செய்து பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் இந்தியன் ரயில்வே நமக்கு உதவி செய்கிறது.
இந்தியன் ரயில்வேயின் டோர் டு டோர் பார்சல் சேவை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ரயில்வே மற்றும் இந்திய அஞ்சல் துறாஇ ஆகிய இரண்டும் இணைந்த இந்த சேவை, பார்சல்களை நம்முடைய வீட்டிற்கு வந்து எடுத்துச் சென்று ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்து நாம் பொருட்களை எங்கு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ அந்த இடத்திற்கு மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. இந்தியன் ரயில்வே மற்றும் இந்திய தபால் துறை ஆகிய இரண்டின் கூட்டாண்மையில் நடைபெறும் இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் கட்டமாக இந்த சேவை நான்கு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல் கொல்கத்தா வரை, பெங்களூரு முதல் கௌஹாத்தி வரை, சூரத் முதல் முசாபூர் வரை மற்றும் ஹைதராபாத் முதல் நிஜாமுதீன் வரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மேலும் சேவை விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் எந்த இடத்தில் பிக்கப் செய்ய வேண்டும் மற்றும் டெலிவரி செய்யப்படும் வேண்டும் என்பதை சரியாக சொல்லிவிட்டால், சரியான நேர அட்டவணையில் எந்தவிதமான சேதமும் இல்லாமல் வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் சென்று அதன் பின் ரயில் நிலையத்துக்கு கொண்டு சேர்ந்து கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பை இந்திய அஞ்சல் துறை எடுத்துக் கொள்கிறது.
ரயில்வே துறை ரயிலில் அந்த பொருட்களை எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ அந்த ஊருக்கு கொண்டு செல்கிறது. அதன் பிறகு அந்த ஊரில் இருந்து டெலிவரி செய்யப்படும் இடத்திற்கு அந்த ஊரில் உள்ள அஞ்சல் துறை பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. இதன் காரணமாக நம்முடைய பொருள்கள் எந்த விதமான சேதமும் இன்றி எந்தவிதமான சிரமமும் இன்றி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஷிப்ட் ஆகிறது.
மேலும் பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கான காப்பீடு தொகை தரும் வசதியும் இதில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு கிலோமீட்டர் மற்றும் பொருட்களின் எடையை பொறுத்து கட்டணம் பெறப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ஆறு ரூபாய் வரை மட்டுமே கட்டணம் பெறப்படுவதால் மற்ற கார்கோ கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த கட்டணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.