இந்தியா
மியூச்சுவல் ஃபண்டுக்கு இணையான வட்டி விகிதங்கள்: பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய தனியார் வங்கி..!
இந்திய ரிசர்வ் வங்கிய ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களில் ஐந்து முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஐந்து முறை பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன்னர் அதிகபட்சமாக 6% மட்டுமே பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 8 சதவீதத்தை நெருங்கி இருப்பது பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மியூச்சுவல் பண்ட் போன்ற ரிஸ்க்கான திட்டங்களில் கூட 8 சதவீதம் வரை தான் வருமானம் வரும் நிலையில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத பிக்சட் டெபாசிட்டிலேயே சுமார் 8% வட்டி என்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.
சமீபத்திய வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, எச்டிஎப்சி வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 4.75% முதல் 7.00% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.75% வரையிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
தற்போது, எச்டிஎப்சி வங்கி 46 முதல் 60 நாட்களுக்கு வைப்புத்தொகைக்கு 5.75% மற்றும் 61 முதல் 89 நாட்களுக்கு வைப்புத்தொகைக்கு 6.00% வட்டி விகிதங்களை வழங்குகிறது.
90 நாட்கள் முதல் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு இப்போது 6.50% வட்டியும், 6 மாதங்கள், 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை 6.65% வட்டியைப் பெறுகின்றன. இருப்பினும், 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை முதிர்ச்சியடையும் மொத்த நிலையான வைப்புகளுக்கு, வங்கி 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் 1 வருடம் முதல் 15 மாதங்களில் முதிர்ச்சியடைபவர்களுக்கு, எச்டிஎப்சி வங்கி இப்போது 7.00% வட்டி விகிதத்தை வழங்கும்.
15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் தவணைக்கு 7.15% வட்டி விகிதத்தையும், 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் தவணைக்கு 7.00% வட்டி விகிதத்தையும் வழங்குவதாக எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கியின் இணையதளத்தின்படி, மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எச்டிஎப்சி வங்கியின் மொத்த நிலையான வைப்புத்தொகையின் வழக்கமான விகிதங்களுக்கு மேல் 0.50% கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இந்திய குடிமக்கள் மற்றும் குறைந்தபட்சம் 60 வயதுடைய மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் கூடுதல் வட்டி விகித சலுகைகளுக்கு தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.