இந்தியா
10ஆம் வகுப்பில் பாஸ் செய்தால் விமான பயணம்.. சொந்த காசை செலவு செய்யும் ஆசிரியர்!
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு விமான பயணத்தில் அழைத்துச் செல்வேன் என ஆசிரியர் ஒருவர் கூறியதை அடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சம்பளம் வாங்கிக்கொண்டு கடனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் ஒருசிலர் இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் படித்து பாஸ் செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் இருக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருவதை அடுத்து கவலை கொண்டார். இதனை அடுத்து மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.
அந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் என்பதால் அவர்களிடம் உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் பெரும்பாலோனோர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இதனை அடுத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்பவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாகவும் அவர் தனது சொந்த காசை செலவு செய்வதாகவும் அறிவித்தார். இதனையடுத்து அந்த ஆண்டே 4 மாணவர்கள் பாஸ் செய்தனர். 10ஆம் வகுப்பில் 2 மாணவிகள், 12ஆம் வகுப்பில் இருவரும் பாஸ் செய்தனர்.
இதனை அடுத்து அவர் 2 மாணவிகளை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் அழைத்து சென்றார். அங்கு அவர்கள் இந்தியா இன்னோவேஷன் மற்றும் இன்வென்ஷன் எக்ஸ்போவில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் மற்றொரு 2 மாணவர்கள் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதை அடுத்து அவர் அடுத்த வாரம் டெல்லிக்கு அழைத்துச் செல்ல உள்ளார். டெல்லியில் அவர்கள் ராஷ்டிரபதி பவன், செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு விமான பயண வசதியை தனது சொந்த காசில் செய்து தருவதை அடுத்து மாணவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ஊக்கத்துடன் படித்து வருகிறார்கள் என்றும் அது அந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த ஒரு அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் படிக்கும் 22 மாணவர்கள் தாங்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு பாஸ் செய்துவிடுவோம் என்று கூறியதை அடுத்து 22 மாணவர்களையும் கண்டிப்பாக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று உறுதி அளித்துள்ளார். அவர் தனது சம்பளம் முழுவதையும் இதற்காக செலவு செய்தாலும் பரவாயில்லை தனது மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
அந்த ஆசிரியரின் பெருந்தன்மையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு ஊருக்கு இவர் போன்ற ஒரு ஆசிரியர் இருந்தாலே இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறந்ததாக ஆகிவிடும் என இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.