தமிழ்நாடு
ஹிட்லரை போல் பிரதமர் மோடி பாசிச ஆட்சி நடத்துகிறார்: இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்!
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் பிரதமர் மோடி ஹிட்லரை போன்று பாசிச ஆட்சி நடத்துவதாக கூறினார்.
மாநாட்டில் பேசிய முத்தரசன், பிரதமர் மோடி என்ன படித்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எந்தவித பதில்களும் கூறாமல், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பார்த்து உங்களுக்கும், அதானிக்கும் என்ன உறவு உள்ளது என்பதை சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி மீது குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உடனே அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் அதற்குள் பிரதமர் மோடி அவருடைய எம்பி பதவியை பறித்து, அவர் இருந்த அரசு வீட்டை காலி செய்ய வைத்து ஒரு சர்வாதிகார போக்கை கையாண்டுள்ளார்.
ஹிட்லர் எப்படி ஒரு பாசிச ஆட்சியை நடத்தினாரோ அதேபோல் பிரதமர் மோடி ஒரு பாசிச ஆட்சியை நடத்துகிறார். ஹிட்லர் போரில் தோல்வி அடைந்தபோது தன்னுடைய குழந்தைகளை விஷ ஊசி போட்டும், காதல் மனைவியை சுட்டுக் கொன்றும், தான் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டார். பாசிச ஆட்சி நடத்திய அவரின் நிலைமை, இந்தியாவில் பாசிச ஆட்சி செய்யும் பிரதமர் மோடிக்கு வந்து விடக்கூடாது என்றார்.