தமிழ்நாடு
கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்க்கும் தொடர்பு; பதவிக்காக கொலையும் செய்வார்கள்: பகீர் குற்றச்சாட்டு!

தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வரும் கொடநாடு கொலை விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தொடர்பு உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவு புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகள் போன்றவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதல்வர் மீதே கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கர்நாடக மாநில செயலாளரும் டிடிவி தினகரனனின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாஜக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டால் மூன்று மணி நேரம் கூட அவரால் ஆட்சியில் இருக்க முடியாது. கொலைவழக்கில் உள்ளே சென்றுவிடுவார். கொடநாடு விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தொடர்பு உள்ளது. திராவிட ஆட்சியில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முதல்வராக இருந்தது கிடையாது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பது வேதனையாக இருக்கிறது.
கொடநாடு விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றால் உடனடியாக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளியே வரும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய புகழேந்தி, பதவிக்காக இந்த இபிஎஸ் ஓபிஎஸ் கொலையும் செய்வார்கள் என்றார்.













