உலகம்
ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் சிறுவர்களிடம் அதிகம் காணப்படுகிறது?
கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அதிகளவில் ஓமிக்ரான் தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரையில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம் ஓமிக்ரான் சிறுவர்களை மட்டும் தான் அதிகம் தாக்குகிறது என்பதற்கான தரவுகளும் இல்லை.
இருந்தாலும் சிறுவர்களுக்கு வரும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சிறுவர்களுக்குளுக்கு ஏற்படும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள்
பெரியவர்கள் மற்றும் வயதானவர்களைப் போன்று சிறுவர்களுக்கும் பல்வேறு கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லோருக்கும் ஒன்றாகவே உள்ளது.
காய்ச்சல், சோர்வு, இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு போன்றவை கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகள். அதுவே சிறுவர்களைத் தாக்கும் போது இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, தோல் அல்லது கண்கள் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஓமிக்ரான் தொற்றைப் பொறுத்த வரையில், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு க்ரூப் எனப்படும் கடுமையான, குரைக்கும் இருமலுக்கு வழிவகுக்கலாம் என சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் சிறுவர்கள் நெருக்கமாக இருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டால், மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்பட்டு குரூப்புக்கு வழிவகுக்கிறது என கூறுகின்றனர்.
அமெரிக்காவில் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் கொரொணா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு நிலை தென் ஆப்ரிக்காவிலும் ஓமிக்ரான் அதிகளவிலிருந்த போது ஏற்பட்டுள்ளது. ஆனால் டெல்டா தொற்றை விட ஓமிக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.