தமிழ்நாடு
கிரிஜா, ராஜேந்திரன் ஓய்வு பெறுவதால் புதிய தலைமைச்செயலாளர், புதிய டிஜிபி நியமனம்!
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நாளை ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த கே.சண்முகம் ஏற்கனவே கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்துள்ளார்.
அதேப்போல தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதியை புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், சென்னை காவல் ஆணையராக இரண்டு முறையும், தென்மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார்.