தமிழ்நாடு
நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்: இந்நாள் பொன்னாள் என அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற மாணவர் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பேசியதாவது:
கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்.இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது. இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.
மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். இளைஞர்கள் அனைவரும் அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும். எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க நாள் என்பதால் எனது வாழ்வில் இன்று பொன்னாள்.
படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், திறமை சார்ந்ததாக மாற வேண்டும்; வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக இல்லாமல் திறன் சார்ந்ததாக மாற வேண்டும். பெற்ற தாய் போல மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.