கிரிக்கெட்
வெற்றியின் விளிம்பில் இருந்தும் குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அதிர்ச்சி தோல்வி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை எதிர் கொண்டது குஜராத் அணி. டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் 66 ரன்களை குவித்தார். லக்னோ அணி சார்பில் குருனால் பாண்டியா மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லக்னோ திணறல்
வெற்றிக்குத் தேவையான 136 ரன்களை துரத்தி லக்னோ அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், மேயர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த குருனல் பாண்டியா 23 ரன்களை எடுத்து வெளியேறினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கடைசி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், லக்னோ அணிக்கு 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தது. தொடர்ந்து பூரன் 1 ரன்னில் வெளியேறினார்.
குஜராத் சிறப்பான பந்துவீச்சு
குஜராத் சிறப்பாக பந்து வீசிய நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல், அடுத்த பந்தில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஸ்டாய்னிஸ் கேட்ச் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து படோனி, ஹூடா ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார்கள்.
இறுதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இதனால் குஜராத் அணி அபார வெற்றியைப் பெற்றது.

















