ஆரோக்கியம்
மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் புற்றுநோய் அபாயம் – டாக்டர் மேத்தா எச்சரிக்கை!

கல்லீரல் புற்றுநோய் என்பது மது அருந்துபவர்கள் அல்லது வயதானவர்களுக்கே ஏற்படும் நோயல்ல. தற்போது மது அருந்தாத இளைஞர்களிடமும் இந்த நோய் அதிகரித்து வருவதாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சங்கேத் மேத்தா எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், WHO புள்ளிவிபரப்படி 1990 முதல் கல்லீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதில் பலருக்கு காரணம் வைரஸ் ஹெபடைடிஸ் என்றாலும், சுமார் 16% நோய்களின் காரணம் தெரியவில்லை. குறிப்பாக மது அருந்தாதவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) முக்கிய அபாய காரணமாக உள்ளது.
இந்தியாவில் சுமார் 16–32% பெரியவர்கள் (சுமார் 120 மில்லியன் மக்கள்) NAFLD-இனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 15–39 வயதுக்குட்பட்டவர்களிடம், NAFLD பரவல் 1990-இல் 25% ஆக இருந்தது, 2019-இல் 38% ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் பருமன் மற்றும் மது பழக்கம் இல்லாதவர்களுக்கும் NAFLD இருந்தால் கல்லீரல் புற்றுநோய் அபாயம் 13% அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கல்லீரலை பாதுகாக்கும் வழிகள்:
உட்கார்ந்த வாழ்க்கை முறையைத் தவிர்த்து, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
எடை மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அசாதாரண சோர்வு, உடல்நலக்குறைவு, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் தொடர்ந்து கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டும்.
டாக்டர் மேத்தா கூறுகையில், “கல்லீரல் புற்றுநோய் மது அருந்துபவர்களுக்கே அல்ல, மது அருந்தாதவர்களுக்கும் ஏற்படலாம். ஆகவே, முன்கூட்டியே பரிசோதனை செய்து, ஆரோக்கிய பழக்கங்களைப் பின்பற்றுவது மிக அவசியம்” என்று வலியுறுத்தினார்.



















