செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கல் – விரைவில் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) மகளிருக்கு பெரும் ஆதரவாக விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.
தற்போது, 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள நிலையில், புதிய தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான புதிய விண்ணப்பங்களை கடந்த ஜூலை மாதம் அரசு பெறத் தொடங்கியது.
அதேபோல், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் இந்த திட்டத்துக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை பயனாளிகளாக இல்லாத பெண்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். எனினும், திட்டத்தின் தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வாகுவர். விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.
தகுதி நிபந்தனைகள் குறித்து தெரியாதவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிமுறைகள் என ஆன்லைனில் தேடிப் பார்த்து முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் முகாம்களில் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் மனு அளிக்கலாம்.
இம்முறை எத்தனை புதிய பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்து அரசு இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், தகுதியான அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அரசு உறுதி தெரிவித்துள்ளது.
தற்போது, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புதியதாக மகளிர் உரிமைத்தொகை மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் தற்போது பரிசீலனையில் உள்ளன.
அரசு இன்னும் இரண்டு மாதங்களில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது, அதன்படி தகுதியான புதிய பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்து அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, “இரண்டு மாதங்களில் இதுகுறித்த நல்ல செய்தி வெளியாகும்” என்றார். எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

















