தமிழ்நாடு
ஆளுநருக்கு இது அழகல்ல, வேதனையாக உள்ளது: அதிமுகவின் கே.பி.முனுசாமி!
ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவின் கே.பி.முனுசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் பேசியதற்கு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் கே.பி. முனுசாமி, மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை சொல்வது அழகல்ல. ஆட்சியாளர்கள், மக்களின் உணர்வுகளையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு முடிந்த நிகழ்வு குறித்து அவர் கருத்து சொல்வது என்பது சற்று வேதனையாக உள்ளது என்றார்.
மேலும், பிரதமர் மோடி, தன்னுடைய கடுமையான உழைப்பாலும் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் உலகத் தலைவராக உயர்ந்து கொண்டிருக்கிறார். எனவே பிரதமர் மோடி, அந்நிய பணம் இங்கே வருவதற்கு அனுமதிக்கமாட்டார். அப்படி வருபவர்களை அவர் அடையாளம் கண்டு சிறையில் அடைப்பார் என்றார் கே.பி.முனுசாமி.