இந்தியா
அல் கய்தாவின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி: தினமும் ஏராளமான அச்சுறுத்தல்கள் வருகின்றன!

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய கடித விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய அந்த கடிதம் அல் கய்தா அமைப்பின் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. காஷ்மீரை மறந்துவிடாதீர்கள் என்ற தலைப்பில் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில், இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து இடைவிடாமல் தாக்குதல் நடத்த காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அதனால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து இந்தியாவுக்கு மனிதவளத்திலும், ராணுவ உபகரணங்களிலும் வெகுவான இழப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் என்பது அமெரிக்கா நிர்வகிக்கும் எல்லையில் நடைபெறும் மதச்சார்பற்ற போட்டி மட்டுமே. காஷ்மீரின் சண்டை என்பது தனிப்பட்ட மோதல் அல்ல, காஷ்மீர் விவகாரம் ஒட்டுமொத்த உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும்.
காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செச்சினியா, மத்திய ஆசியா, ஈராக், சிரியா, அரபு தீபகற்பம், சோமாலியா, துர்கிஸ்தான் ஆகிய இடங்களில் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை. மசூதிகள், சந்தைகள் என இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் நமது ஆட்கள் தாக்குதல் நடத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் அல் கய்தாவின் எச்சரிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இதுபோல தினமும் நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவசியம் இல்லை. எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பாதுகாப்புப் படைகள் போதிய பலத்துடன் இருக்கின்றன என தெரிவித்தார்.



















