தமிழ்நாடு
நான் குற்றவாளி இல்லை: சிறையில் வீடியோ கான்பரன்சில் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீது நான்கு அந்நிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சசிகலா மீதான நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளைப் படித்து காட்டினார்.
அதனை கவனமாக கேட்ட சசிகலா, நான் குற்றவாளி இல்லை, இவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டு, முழுவதையும் நான் மறுக்கிறேன் என்றார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய ஒப்புக்கொள்கிறீர்களா என சசிகலாவிடம் கேட்டார்.
சசிகலா அதற்குச் சம்மதம் தெரிவித்ததையடுத்து நீதிபதி மற்ற இரண்டு வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதி தள்ளிவைத்தார். அப்போதும் சசிகலாவை வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.















