கிரிக்கெட்
அசத்திய 21 வயது தமிழக வீரர்: குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் போட்டியின் 7-வது லீக் போட்டியில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் 21 வயதான தமிழக வீரர் சாய் சுதர்ஷனின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 37 ரன்களும், அக்சர் பட்டேல் 36 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியின் ரஷித் கான், முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. 54 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இருந்தாலும் 21 வயதான தமிழகத்தை சேர்ந்த வீரரான சாய் சுதர்ஷனுடன், கடைசி நேரத்தில் டேவிட் மில்லரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த குஜராத் அணி 18.1 ஓவரில் 163 என்ற வெற்றி இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்தனர்.
48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்கு உதவிய சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை முதன் முறையாக ஐபிஎல் தொடரில் பெற்றார். கடைசி நேர அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.