இந்தியா
குஜராத் தேர்தல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் வரிசையாக வாக்களித்த அதிசயம்
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் குஜராத் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் இந்த முறை வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான அடுத்த சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் செல்லும் காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் ஒரே நேரத்தில் வாக்கு பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்திலுள்ள காம்ரேஜ் என்ற பகுதியில் வசிக்கும் இந்த குடும்பத்தை சேர்ந்த 81 பேர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக பல வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்பி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இதில் 82 வயதில் சோலங்கி என்பவரும் முதல் முதல் முறையாக வாக்களிக்கும் இரண்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒரே நேரத்தில் வந்து வாக்களித்து இருக்கின்றோம் என்றும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 96 பேர் இருக்கிறார்கள் என்றும் ஆனால் 15 பேர் வேறு வேறு மாநிலங்களில் வசிப்பதால் அவர்களால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.