இந்தியா
கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

சீனர்கள் காகிதங்களை கண்டுபிடித்த நாளிலிருந்தே இன்றுவரை காகிதங்களுக்காக மரங்கள் வெட்ப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுதும் பல கோடி டன் எடை கொண்ட மரங்கள் காகிதங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. .மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் காகிதங்களுக்காக எரிபொருளுக்காக மரச்சாமான்கள் செய்வதற்காக என பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க இயலா சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் என்று பல்வேறு மரம் வளர்ப்பதற்கான உத்திகளை அரசாங்கங்களும் தன்னார்வலர்களும் செயல்படுத்தி வருகின்றனர்.
அப்படி ஒரு முன்முயற்சியாகத்தான் காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை மட்டுமாவது குறைக்க முடியுமா என்ற நோக்கத்திலே பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு கல் காகிதங்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
இந்த கல் காகிதங்களின் பிரதான மூலப்பொருளே கல்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆமாம்… கிரானைட் கற்கள் உடைப்பின்போது கிடைக்கும் நுண்ணிய மணல் துகள்களை சேகரித்து அதில் உயர் அடர்த்தி கொண்ட “பாலி எத்திலீன்“ என்ற ஒருவகையான பிசினை கலந்த இந்த கல் காகிதங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதுடன் வீணே மண்னில் கலக்கும் கிரானைட் துகள்களை மறு சுழற்சி செய்து உபயோகமான ஒரு பொருள் செய்ய பயன்படுத்தி சாதனை புரியப்பட்டுள்ளது.
1 டன் காகிதங்கள் உற்பத்தி செய்ய 17 டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதேபோல் 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவாகும். ஆனால் 1 டன் கல் காகிதங்கள் தயாரிக்க 20 லிட்டர் தண்ணீரே போதுமானது என்று கூறுகிறார்கள் சீன ஆய்வாளர்கள்.
இந்த கல் காகிதங்கள் வழக்கமாக நாம் பயன்படுத்தும் காகிதங்களைப் போலவே நெகிழும் தன்மையுடன் இருக்குமாம். நீர் புகாத தன்மை மற்றும் அதன் உறுதி காரணமாக நீண்ட காலம் உழைக்குமாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மண்ணில் எளிதாக மக்கிப் போய் விடுமாம். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் இதனை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாக இருக்குமாம். இதையும் குறைக்கக்கூடிய வழிகளை தற்போது ஆராய்ந்து வருகின்றனர் இந்த சீன விஞ்ஞானிகள். விடியும் நேரம் வெகுதூரமில்லை.













