தமிழ்நாடு
பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா: ஆளுனரின் குற்றச்சாட்டும் அதற்கான மறுப்பும்!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது மிகவும் ஆபத்தான அமைப்பு என்றும் மனித உரிமை, இளைஞர்கள் நலன் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாத இயக்கம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில தலைவர் முகமது அன்சாரி விளக்கமளித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அரசியல் லாபத்திற்காக இயங்கும் அமைப்பு அல்ல, மக்களின் உரிமைக்காக இயங்கும் அமைப்பு. ஆளுநரின் வார்த்தை என்பதை ஆர்.எஸ்.எஸ். வார்த்தையாகவே பார்க்கிறேன்.
பாஜகவின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் நபராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருக்கு அங்கு எப்படி மதிப்பு இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழக மக்களின் உரிமைகளில் தலையிடும் விதமாக ஆளுநரின் செயல் உள்ளது.
அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூவுபவர்கள் தீவிரவாதிகள் என்று ஆளுநர் பேசியுள்ளார். இன்றைய சூழலில் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் யார் என்று அனைவருக்குமே தெரியும். ராமநவமி, இந்துக்களின் திருவிழாக்களில் கலவரத்தை ஏற்படுத்தும் செயலில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருகிறது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம் என கூறியுள்ளார்.