இந்தியா
ஜெ. உடல்நலக்குறைவாக இருந்தபோது யாரும் பிரச்சனை ஆக்கவில்லை: கோவா அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக்குறைவாக இருந்த போது அதை யாரும் பிரச்சனை ஆக்கவில்லை. ஆனால் தற்போது மனோகர் பாரிக்கர் உடல்நிலையை மட்டும் பிரச்சனை ஆக்குகிறார்கள் என கோவாவில் பாஜக ஆட்சியில் பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள சுதின் தவாலிகர் குற்றம் சாட்டுகிறார்.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவதிப்பட்டு வரும் அவர் அமெரிக்காவுக்கு சென்று மூன்று மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகததால் அவர் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கோவாவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் அல்லது வேறு முதல்வரையோ, ஆட்சியை கலைத்துவிட்டு ஆட்சி மாற்றத்தையோ கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விடாப்பிடியாக வலியுறுத்து வருகிறது. ஆனால் கோவாவின் முதல்வராக மனோகர் பார்க்கரே தொடர்வார் எனவும், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் கொண்டு வரப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மஹாராஷ்ட்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த கோவா பொதுப் பணித்துறை அமைச்சர் சுதின் தவாலிகர் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அதையெல்லாம் யாரும் ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நிலையை மட்டும் ஏன் பிரச்சினை ஆக்குகிறீர்கள் எனத் தெரியவில்லை. கோவாவில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் படிப்படியாகக் குறையும் என்றார்.