இந்தியா
கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை என்றாலும், வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூபாய் 105 உயர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக 19 கிலோ கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் இன்று முதல் டெல்லியில் 2012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூபாய் 27 உயர்ந்துள்ளதால் ரூபாய் 569 விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்திலும் வர்த்தக சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்ந்துள்ளதால் 2145.50 என விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும், ஏற்கனவே விற்பனையாகி வரும் ரூ.915.50 என்ற விலையிலேயே வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக உபயோகித்திற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்துள்ளதால் விலைவாசி உயரும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.