இந்தியா
மறு சீரமைப்பா?… மாநில உரிமை பறிப்பா??? அழைத்த தமிழ்நாடு… அணிவகுத்த தலைவர்கள்…


ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள் அந்த மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு மார்ச் 22ல் சென்னையில் நடைபெற உள்ள கூட்டுக்குழு கூட்டத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.
திரளும் தலைவர்கள்… திரும்பிப் பார்த்த இந்தியா….
இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி, பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவத்சிங்மான், காங்கிரஸ் ஆம்ஆத்மி தலைவர்கள், ஒடிசா பிஜூ ஜனதாதளம் காங்கிரஸ் தலைவர்கள், பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ஜனசேனா ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ மும் குறையாத வகையில் தொகுதி மறு வரையறை நடக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்… இந்த கூட்டத்தில் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ கான் பிரஸ் மூலம் உரையாற்றினர்…
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட அழகிய கண்ணாடிப் பெட்டகத்தில் பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் பட்டு, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கொடைக்கானல் பூண்டு, ஈரோடு மஞ்சள், கோவில்பட்டி கடலை மிட்டாய் ஆகிய 8 பாரம்பரிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஒன்றினையும் மாநிலங்கள்… ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு…
தென் மாநிலங்கள் மொத்தமாக 100 தொகுதிகளை இழக்க நேரிடும் என பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பதில் குழப்பமாகவே உள்ளது..
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டியுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்ற அணைத்து தலைவர்களுக்கும் அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. அவரவர் தாய்மொழியில் நிகழ்வுகளைக் கேட்க மொழிபெயர்ப்புக் கருவிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது தலைமை உரையில் பின்வருமாறு பேசியிருந்தார்..
ஐனநாயகத்தை காக்க ஓரணியில் திரண்டுள்ளோம். வரலாற்றில் கூட்டாட்சியைகாக்கும் மிக முக்கிய நாள். தொகுதி மறு வரையறை மூலம் நமது பிரதிநிதித்துவத்தை குறைப்பது நமது அரசியல் வலிமையை குறைப்பதாகும்.. கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்.. நமது பிரதிநிதித்துவம் குறைந்தால் நமது விருப்பமில்லாமல் நம்மை அறியாதவர்களால் நமக்கான சட்டங்களும் திட்டங்களும் இயற்ற வாய்ப்பாகி விடும். எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநித்துவம் குறையக் கூடாது. குறைய விடக்கூடாது. தொகுதி மறு சீரமைப்பின் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மணிப்பூர் மாநிலத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால்தான் மணிப்பூரின் குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க முடியவில்லை. இதனால் நமது வரிப் பகிர்வு, நிதிப் பகிர்வு குறைந்துவிடும். பட்டியலின் மக்கள், சிறுபான்மையினரின் பிரதிநித்துவம் குறைந்துவிடும். சிறப்புத் திட்டங்கள் வரும் வாய்ப்பு இல்லாமல் போகும். வரி கட்டுவதற்கான காலணி மாநிலமாக மாறிவிடுவோம். எனவே அணைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என முன்மொழிகிறேன்.. இவ்வாறு பேசியிருந்தார்…
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
இது ஒரு தொடக்கம் தான்.. நமது வலிமையை நாம் நிரூபிப்போம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை மறந்து போராடுவோம் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கத் கூடாது என ஒரிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்…
கூட்டத்தில் பங்கேற்ற அணைத்து தலைவர்களும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தங்களது கண்டனக் குரலை மிகவும் வலிமையாக பதிவு செய்தனர்…
நாடே திரும்பிப் பார்க்கும் இந்த நிகழ்வு ஒன்றிய அரசின் கவனத்தை திருப்புமா… பொறுத்திருந்து பார்ப்போம்…















