தமிழ்நாடு
பெரம்பூர் தொகுதிக்கு மாறி வந்த வடசென்னை வாக்குப் பதிவு இயந்திரம்!

தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலும், மக்களவை தேர்தலும் நடைபெற்றதால் இந்த இரண்டு தேர்தலிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. அதன் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் வடசென்னை மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணிமேரிக் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தனித் தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அப்போது பெரம்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 4-வது சுற்று நடைபெற்றபோது வாக்குப் பதிவு இயந்திரத்தை திறந்தபோது, வடசென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு மாறி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் முகவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கு இயந்திரம் மாறியிருப்பதால் வாக்கு எண்ணிக்கையைத் தொடரக் கூடாது என்று முழக்கமிட்டனர். அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகிறார். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் அரசியல் கட்சியினர் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்களுடன் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாக்கு மையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















