தமிழ்நாடு
ஓபிஎஸ் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா? திடீரென தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள்!

தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கவே இந்த முயற்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கல்லூரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று இரவு சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கும் தகவல் அறிந்த திமுக, காங்கிரஸ், அமமுகவினர் அங்கே உடனடியாக குவிந்தனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றிக்காக மோசடி செய்வதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு தொடர்கிறது. திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹுவிடமும் முறையிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் அமமுகவின் தொடர்ந்து ஒரே குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். ஓபிஎஸ் எப்படியாவது தன் மகனை வெற்றிபெற வைக்க முயற்சிக்கிறார். அதற்காக மோசடி செய்யவே இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அமமுகவினர்.






















