இந்தியா
மருத்துவம் படிக்க சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா திடீரென படையெடுத்து வந்ததால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் முதல் கட்டமாக நேற்று 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க சின்னஞ்சிறு நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்வதால் பல்லாயிரம் கோடி ரூபாய் நம் நாட்டை விட்டு செல்கிறது என்றும் இந்தியாவிலேயே படித்தால் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போர் மூண்டு, மருத்துவம் படிக்கச் சென்ற இந்தியர்கள் பலர் சிக்கித்தவிக்கும் சூழலில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.