தமிழ்நாடு
அதிமுக ஒரு இமயமலை.. அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு!

அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் நேரடியாக களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் உதயநிதி ஸ்டாலினும் கமலும் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கமல் தற்போது பலவீனமாக இருக்கிறார். திமுகவும் அப்படிதான் பலவீனமாக உள்ளது. இந்த இரு பலவீனங்களும் இமயமலையுடன் மோதப் பார்க்கின்றன. இமயமலையோடு மோதினால் மண்டை தான் உடையும்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமையலாம். ஏன் நான்காவது அணி கூட அமையட்டும். எத்தனை அணிகள் அமைந்தாலும் அதிமுக தான் எப்போதும் முதல் அணியாக இருக்கும்’ இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்


















