தமிழ்நாடு
அப்பல்லோவில் டீ ரூ.350, இட்லி ரூ. 650: திவாகரன் அதிரடி பேட்டி!
சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் இதனை கேலி செய்து மீம்ஸ்களாக வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த உணவு மற்றும் குடிநீர் செலவு குறித்து கருத்து தெரிவித்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம் பல அறைகளை வாடகைக்கு எடுத்துச் சாப்பிட்டதற்குதான் ஒன்றரை கோடி செலவு ஆனது என குற்றம் சாட்டினார். இதற்கு கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் பதில் அளித்துள்ளார்.
சசிகலா தரப்பினர் மட்டுமே அப்பல்லோவில் சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தில் என்ன ஒன்றரை லட்சம் பேரா இருக்கிறார்கள்? அமைச்சர்கள், அவர்களின் பிஏக்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாதுகாவலர்கள் என பலரும் அப்பல்லோவில்தான் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு கணக்கில்தான் கூறிவிட்டுவருவர். அப்பல்லோவில் டீக்கு ரூ.350, இட்லிக்கு ரூ. 650 என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போலத்தான் பில் போடுவார்கள்.
ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அங்குதான் உணவு பரிமாறப்பட்டது. சசிகலா தரப்பினர் 10 பேர்தான் அப்பல்லோவில் இருந்திருப்பார்கள். மேலும் தான் சசிகலா குடும்பத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.