தமிழ்நாடு
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார செயலாளர் தகவல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 400 என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 900ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாகவும் இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாது தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சென்னையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ஒரு சில நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு தடை உத்தரவு ஏற்பட்டுள்ளது போல் சென்னை உள்பட ஒரு சில தமிழக நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


















