தமிழ்நாடு
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500: வகைவகையாய் அபராதம் போடும் சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரூபாய் 200 அபராதம் என்றும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம்கள் உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் அபராதங்களை ரூபாய் 10 லட்சம் அளவிற்கு தினமும் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தினமும் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு முறைக்கும் மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள் கடைகள் வணிக வளாகங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் வகைவகையான அதிரடி அபராதம் குறித்த அறிவிப்பு சென்னை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.






















